Wednesday, December 4, 2013

நள்ளிரவில் கதவைத் தட்டிய கப்பல் கப்டன் பொதுமக்களால் மடக்கிப்பிடிப்பு

காங்கேசன்துறை துறைமுகத்திற்கு கப்பலில் வந்த கப்பலின் உப கப்டன் நள்ளிரவு வேளையில் ஏழாலை சூராவத்தை பகுதியில் உள்ள வீடொன்றினுள் உட்பிரவேசிக்க முற்பட்ட வேளை அச்சமடைந்த மக்கள் மடக்கிப் பிடித்து சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
 
கப்பல் நங்கூரமிடப்பட்ட பின்னர் குறிப்பிட்ட உதவிக் கப்டன் இலங்கை மின்சார சபையின் சுன்னாகம் அலுவலகத்தில் கடமையாற்றும் தனது நண்பனான பொறியியலாளரைச் சந்திக்கச் சென்றுள்ளார்.
 
அதனைத் தொடர்ந்து இருவரும் மது அருந்திவிட்டு நண்பரின் இருப்பிடத்துக்கு சென்றுள்ளனர். நள்ளிரவு வேளையில் குறிப்பிட்ட உதவிக் கப்டன் வெளியேறி ஏழாலை சூராவத்தைப் பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் உட்பிரவேசிக்க முயன்று கதவைத் தட்டியதுடன் சிங்கள மொழியில் பேசியும் உள்ளனர்.
 
இந்நிலையில் திருடன் என நினைத்த பொதுமக்கள் பிடிக்க முற்பட்டவேளை குறித்த நபர் தாக்கிவிட்டு தப்பியோட முயற்சித்தபோது பொதுமக்கள் அந் நபரை விரட்டிப் பிடித்து சுன்னாகம் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
 
இதனைத் தொடர்ந்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் குறித்த நபர் யார் என இனங்காணப்பட்டுள்ளதுடன் நண்பரான இலங்கை மின்சார சபையில் கடமையாற்றும் பொறியியலாளரை அழைத்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு உண்மை நிலை உறுதிசெய்யப்பட்டதன் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார்.