Saturday, November 28, 2009

ரகசிய குறியீட்டு எண் இல்லாத 2 1/2 கோடி செல்போன் இணைப்பு துண்டிப்பு



இந்தியா முழுவதும் உள்ள ரகசிய குறியீட்டு எண் இல்லாத 2 1/2 கோடி செல்போன் இணைப்புகள் வரும் திங்கள் கிழமை முதல் துண்டிக்கப்படுகின்றன.

செல்போன்', வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒன்று ஆகிவிட்டது. செல்போன் பயன்பாட்டில் இந்தியா முன்னணியில் உள்ளது. செல்போன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பல வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் செல்போன் உற்பத்தி தொழிற்சாலைகளை நிறுவி உள்ளன. மேலும் கொரியா, சீனா போன்ற நாடுகளில் இருந்தும் செல்போன்கள் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை ஆகின்றன.


செல்போன்களில் ஐ.எம்.இ.ஐ. (சர்வதேச செல்போன் குறியீட்டு எண்) என்ற ரகசிய குறியீட்டு எண் உள்ளது. இந்த எண் 15 இலக்கங்களை கொண்டது ஆகும். ஒவ்வொரு செல்போனுக்கும் ஒவ்வொரு ஐ.எம்.இ.ஐ. குறியீட்டு எண் இருக்கும்.


ஒரு செல்போன் எந்த இடத்தில் இருந்து பேசப்படுகிறது என்பதை இந்த எண்ணின் மூலம்தான் கண்டுபிடிக்க முடியும். மேலும் செல்போன் தொலைந்து விட்டால், உரிமையாளர் அதன் செயல்பாட்டை நிறுத்தி வைக்கவும் இந்த எண் தான் உதவுகிறது.


ஆனால் கொரியா, சீனாவில் இருந்து கள்ளத்தனமாக கொண்டு வந்து விற்கப்படும் ஏராளமான செல்போன்களில் ஐ.எம்.இ.ஐ. என்ற சர்வதேச ரகசிய குறியீட்டு எண் இருப்பது இல்லை. இந்தியா முழுவதும், ரகசிய குறியீட்டு எண் இல்லாத சுமார் 2 1/2 கோடி செல்போன்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டு உள்ளது.


இந்த குறியீட்டு எண் இல்லாத செல்போன்களை பயன்படுத்துவதில் பாதுகாப்பு தொடர்பான பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இந்த வகை செல்போன்களில் இருந்து பேசும் போது எங்கிருந்து பேசுகிறார்கள் என்பதை கண்டுபிடிக்க முடியாது. இது தீவிரவாதிகளுக்கு மிகவும் வசதியாக போய் விடுகிறது.


எனவே, சமீப காலமாக தீவிரவாத அச்சுறுத்தல் அதிகரித்து இருப்பதாலும், நாட்டின் பாதுகாப்பு கருதியும் சர்வதேச குறியீட்டு எண் இல்லாத செல்போன்களின் செயல்பாட்டை முடக்க மத்திய அரசு முடிவு செய்தது.


இதைத்தொடர்ந்து, அத்தகைய செல்போன் வைத்திருப்பவர்கள் அதை மாற்றிக் கொள்வதற்கு வசதியாக வருகிற 30-ந் தேதி (திங்கட்கிழமை) வரை `கெடு' விதித்து மத்திய அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.


அந்த `கெடு' முடிய இன்னும் 2 நாட்களே உள்ளன. எனவே, திங்கட்கிழமை நள்ளிரவு 12 மணி முதல், சர்வதேச ரகசிய குறியீட்டு எண் இல்லாத செல்போன்களின் இணைப்புகள் துண்டிக்கப்படும். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட செல்போன் நிறுவனங்களுக்கு தொலைத்தொடர்பு துறை ஏற்கனவே உத்தரவிட்டு உள்ளது.


எந்த செல்போன்களில் ஐ.எம்.இ.ஐ. சர்வதேச ரகசிய குறியீட்டு எண் இல்லையோ அல்லது எல்லா குறியீட்டு எண்களும் பூஜ்ஜியமாக இருக்கிறதோ அந்த செல்போனில் இருந்து செய்யப்படும் அழைப்புகள் மற்றும் பெறப்படும் அழைப்புகளை ஏற்றுக் கொள்ளக்கூடாது என்று அந்த உத்தரவில் கூறி இருக்கிறது.


இதுகுறித்து, இந்திய செல்போன் சங்கத்தின் தேசிய தலைவர் பங்கஜ் மகிந்திரூ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-


இந்திய தொலைத்தொடர்பு துறை மிகவும் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. சராசரியாக ஒரு மாதத்தில் புதிதாக 1 கோடி செல்போன் இணைப்புகள் வழங்கப்படுகின்றன. அதே எண்ணிக்கையில் புதிய செல்போன்களும் உபயோகத்துக்கு வருகின்றன. இந்தியாவில் உபயோகத்தில் உள்ள 50 கோடி செல்போன்களில் கணிசமானவை ஐ.எம்.இ.ஐ. என்ற சர்வதேச ரகசிய குறியீட்டு எண் இல்லாத செல்போன்கள் ஆகும்.


இத்தகைய ரகசிய குறியீட்டு எண் இல்லாத சுமார் 2 1/2 கோடி செல்போன்கள் உபயோகத்தில் இருப்பதாக கண்டு அறியப்பட்டு உள்ளது. இது உபயோகத்தில் உள்ள மொத்த செல்போன்களில் 5 சதவீதம் ஆகும். இந்த செல்போன்கள் விற்பனையால் அரசுக்கு பெரும் வருவாய் இழப்பும் ஏற்படுகிறது. இத்தகைய செல்போன்களை விற்பனை செய்ய மத்திய தொழில் துறை மற்றும் வர்த்தக அமைச்சகம் ஏற்கனவே தடை விதித்து இருக்கிறது. எனவே,


ரகசிய குறியீட்டு எண் இல்லாத செல்போன்களை விற்பனை செய்வதை வியாபாரிகள் தவிர்க்க வேண்டும். ரகசிய குறியீட்டு எண் இல்லாத சட்ட விரோதமான செல்போன்கள் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதால் அவற்றின் இணைப்பை 30-ந் தேதி முதல் துண்டிக்குமாறு தொலைத்தொடர்பு துறை பிறப்பித்துள்ள உத்தரவுக்கு ஆதரவு அளிக்கிறோம்.


செல்போன் உபயோகிப்பாளர்கள், 57886 என்ற எண்ணுக்கு குறுந்தகவல் (எஸ்.எம்.எஸ்.) அனுப்பி தங்கள் செல்போனின் ரகசிய குறியீட்டு எண்ணை உறுதி செய்து கொள்ளலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.


Thursday, November 19, 2009

குழந்தையை காப்பாற்ற காவல் நிலையத்தில் தாய் குரங்கு வழக்கு



தந்தை குரங்கிடம் இருந்து தனது குழந்தையை காப்பாற்ற தாய் குரங்கு ஒரிசா காவல்நிலையத்தில் மனு கொடுத்துள்ளது. ஒரிசா மாநிலம் பூரி மாவட்டத்தில் உள்ள ஆஸ்ட ராஞ்ச் நகரில் ஏராளமான குரங்குகள் உள்ளன. இவற்றில் ஒரு பகுதி குரங்கு கூட்டம் மார்க்கெட் பகுதியில் வசிக்கின்றன. இதில் ஒரு பெண் குரங்கு 3 மாத குட்டியுடன் இருக்கிறது. இந்த குட்டியை கொல்ல ஆண் குரங்கு ஒன்று தொடர்ந்து முயற்சித்து வருகிறது. அந்த ஆண் குரங்கு குட்டியின் தந்தையாக இருக்கலாம் என்று கருதுகின்றனர்.

ஆண் குரங்கு இந்த குட்டியை கொன்று விடாமல் தடுக்க தாய் குரங்கு எப்போதும் தன் குட்டியை தன் மடியிலேயே வைத்துள்ளது. அதை சுற்றி மற்ற குரங்குகள் பாதுகாப்பாக நிற்கின்றன. இருந்தும் ஆண் குரங்கு குட்டியை கொல்லும் நோக்கத்துடன் அடிக்கடி தாக்கி வருகிறது. அதை மற்ற குரங்குகள் சண்டையிட்டு விரட்டி வருகின்றன. இதை பார்த்த ஊர் பொதுமக்களும் ஆண் குரங்கை விரட்டி அடித்து வருகின்றனர். ஆனாலும் ஆண் குரங்கு குட்டி குரங்கை குறிவைத்து சுற்றி சுற்றி வருகிறது.

இதனால் பொதுமக்கள் போலீசில் புகார் கொடுக்க முடிவு செய்தனர். தாய் குரங்கு நேரடியாக புகார் கொடுப்பது போல ஒரியா மொழியில் மனு ஒன்றை தயாரித்தனர். அதன் கீழ் கைரேகைக்கு பதில் குரங்கின் வால்பகுதியை மையில் நனைத்து பதிவு செய்தனர்.

அதை போலீஸ் நிலையத்தில் கொடுத்தனர். தாய் குரங்குக்கு சிமியன் என்றும், ஆண் குரங்குக்கு ராஜா என்றும், குட்டி குரங்குக்கு குணா என்றும் மக்கள் பெயரிட்டு இருந்தனர்.

சிமியன் கொடுத்துள்ள புகாரில், என் குழந்தையை எனது கணவர் ராஜா கொல்ல முயற்சித்து வருகிறார். அவரிடம் இருந்து என் குழந்தையை பாதுகாக்க வேண்டும். கணவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் தந்தை குரங்கு ராஜா மீது இந்தியன் பியனல் கோடு 307 (கொலை முயற்சி), 363 (கடத்தல்), 366 (அடிமைப்படுத்த கடத்தல்) ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ஆனால் போலீசார் என்ன செய்துவிட முடியும். குட்டியை காப்பாற்றும் விதத்தில் பொதுமக்களே தடியுடன் ஆண் குரங்கை கண்காணித்து வருகின்றனர்.

Tuesday, November 10, 2009

கைகளுக்குள் வரும் இன்டர்நெட்



உலக அளவில் இணைக்கப்பட்ட பல கம்ப்யூட்டர்களை நாம் இன்டர்நெட் என அழைக்கிறோம். ஆனால் இமைப்பொழுதில் எப்படி எங்கோ ஒரு மூலையில் உள்ள கம்ப்யூட்டர் சர்வரில் உள்ள தகவல்கள் நம் கம்ப்யூட்டரை வந்தடைகின்றன? இன்டர்நெட்டை முதலில் பயன்படுத்தும் அனைவரின் மனதிலும் இந்த சந்தேகம், வியப்பு எழுவது இயற்கையே. ஒரு சிலர் மேலும் துருவி ஆய்வு செய்து, நூல்களைப் படித்துத் தெரிந்து கொள்கின்றனர். சிலரோ அதுதான் இன்டர்நெட் என்று கிடைக்கும் தகவல்களைப் பற்றிய சுவராஸ்யத்தில் ஆழ்ந்து விடுகின்றனர். இங்கு அந்த இன்டர்நெட்டில் என்னதான் நடக்கிறது என்று பார்ப்போம். நம் கைகளுக்குள் உலகின் எங்கோ ஒரு மூலையில் உள்ள தகவல்கள், படங்கள், வீடியோக்கள் எப்படி நம் இல்லத்தில் ஒரு அறையில் உள்ள கம்ப்யூட்டருக்குள் வருகிறது என்று பார்க்கலாம்.

கம்ப்யூட்டரை இயக்கி, இன்டர்நெட் இணைப்பை உயிர்ப்பித்து, பிரவுசரின் அட்ரஸ் பாரில் ஓர் இணையதளத்தின் முகவரியை டைப் செய்து என்டர் தட்டுகிறீர்கள். பிரவுசர் எதுவாக வேண்டுமானாலும் – இன்டர் நெட்எக்ஸ்புளோரர், பயர்பாக்ஸ், சபாரி, குரோம், – என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். இதனை "கிளையண்ட்" என அழைக்கிறோம். தற்போதைக்கு "வாடிக்கையாளர்" என வைத்துக் கொள்வோம். இந்த வாடிக்கையாளர் நீங்கள் தேவை என்று சொன்ன, இணைய தளம் வேண்டும் என்று சொன்ன உங்கள் வேண்டுகோளை உங்களுக்கு இன்டர்நெட் இணைப்பு தரும் நிறுவனத்தின் சர்வருக்கு அனுப்புகிறது. அந்த சர்வர், தான் இணைக்கப்பட்டுள்ள இன்னொரு சர்வருக்கு அதனை அனுப்புகிறது. அந்த சர்வரும் அரசாங்க அலுவலகத்தில் ஒரு பைல் மேஜைக்கு மேஜை போகிற மாதிரி அப்படியேஅனுப்புகிறது. ஐ.எஸ்.பி. சர்வரிலிருந்து இந்த வேண்டுகோள் "வெரி ஹை ஸ்பீட் நெட்வொர்க்" என்னும் அதி வேக வழியில் செல்கிறது. இப்படியே சென்று நீங்கள் டைப் செய்த முகவரி உள்ள தளத்தை அடைகிறது. அதனை "உபசரிப்பவர்" என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம். அந்த உபசரிக்கும் சர்வர் பின் நீங்கள் கேட்டுக் கொண்டபடி தன் தளத்தில் உள்ள தகவல்களை பாக்கெட் பாக்கெட்டாக உங்கள் வேண்டுகோள் பயணித்த அதே பாதையில் உங்கள் ஐ.எஸ்.பி. நிறுவனத்தின் சர்வருக்கு அனுப்புகிறது. நீங்கள் இணைப்பு பெற்றிருக்கும் அந்த நிறுவன சர்வர் பின் அதனை உங்கள் கம்ப்யூட்டருக்கு அனுப்புகிறது. இவ்வளவு தானா என்று நீங்கள் கேட்பது புரிகிறது. ஆனால் விஷயம் அவ்வளவு அல்ல. இதில் ஏகப்பட்ட சிக்கல்கள் உள்ள விஷயமும் உள்ளது.

நாம் ஓர் இணையதளத்தின் முகவரியை சொற்களில் அமைத்து அனுப்புகிறோம். இந்த சொற்கள் கம்ப்யூட்டருக்குத் தெரியாதே? எனவே தான் கம்ப்யூட்டர்கள் அறிந்து புரிந்து கொள்ளும் பாஷையில் மாற்றி அனுப்ப வேண்டியதுள்ளது. இதற்கு புரோட்டோகால் (Protocol) என்னும் வழிமுறை உதவுகிறது. புரோட் டோகால் என்பது இரண்டு கம்ப்யூட்டர்கள் இடையே தகவல் பரிமாறிக் கொள்ள அமைக்கப்பட்ட சிஸ்டம் எனச் சொல்லலாம். இது டி.சி.பி., ஐ.பி., எச்.டி.டி.பி., எப்.டி.பி., எஸ்.எம்.டி.பி., மற்றும் வை–பி (TCPIP, HTTP, FTP, SMTP WiFi) எனப் பலவகைப்படும். நாம் பொதுவாக டி.சி.பி – ஐ.பி. பயன்படுத்துவதால் அது குறித்து காண்போம்.

இன்டர்நெட்டில் இணைக்கப் படும் ஒவ்வோரு கம்ப்யூட்டருக்கும் ஒரு ஐ.பி. அட்ரஸ் தரப்படுகிறது. இது சொல்லில் இருக்காது. 0 விலிருந்து 255 வரையிலான எண்களின் கோர்வையாக இருக்கும். எடுத்துக்காட்டாக www.yahoo.com என்னும் தளம் உள்ள சர்வரின் எண் 82.248.113.14 ஆகும். இது இதன் நிலையான எண். உங்கள் கம்ப்யூட்டர் நெட்டில் இணையும்போது, உங்களுடைய ஐ.எஸ்.பி. உங்களுக்கு ஒரு முகவரியை எண்களில் ஒதுக்கும். ஆனால் அது நிலையானது அல்ல. நீங்கள் அப்போது இன்டர்நெட்டில் இருக்கும் வரையில் அந்த முகவரி உங்களுக்குச் சொந்தமானது. முடித்துவிட்டு மீண்டும் செல்கையில் மீண்டும் ஒரு முகவரி வழங்கப்படும். இதற்குக் காரணம் ஓர் ஐ.எஸ்.பி., ஒரே நேரத்தில் நூற்றுக் கணக்கான கம்ப்யூட்டர்களை நெட்டில் இணைக்க வேண்டியுள்ளதால், அவ்வப்போது எண்கள் தரப்படுகின்றன. இந்த எண்களின் கோவை நான்கு இலக்கங்களால் ஆன தொடராக ஒவ்வொரு எண்ணும் ஒரு புள்ளியால் பிரிக்கப்பட்டிருக்கும். எடுத்துக்காட்டாக 123.467.87.23 என்றுகூட இருக்கலாம். இந்த எண்களிலான முகவரி முக்கியமானது. ஏனென்றால் இந்த முகவரியை வைத்துத்தான் இன்டர்நெட்டில் எந்த கம்ப்யூட்டர் வேண்டுகோளை வைத்தது; எந்த கம்ப்யூட்ட ரிலிருந்து தகவல் வர வேண்டியுள்ளது என்று தெரியவரும். டி.சி.பி. (Transmission Control Protocol)என்பது அனுப்பப்படும் தகவல்களைக் கையாளும் வழிமுறை. தகவல்களை சிறு சிறு பாக்கெட்களாகப் பிரித்துப் பின் மீண்டும் சேரும் இடத்தில் அவற்றை இணைத்து ஒழுங்காகத் தருவதே இந்த வழிமுறையின்ச் செயல்பாடு. ஐபி அட்ரஸ் எங்கிருந்து எங்கு இந்த தகவல்கள் போய்ச் சேர வேண்டும் என்பதை உறுதி செய்கிறது. எனவே இந்த இரண்டு வழிமுறைகளும் இணைந்து தகவல் பரிமாற்றத்தை உறுதி செய்கின்றன.

அதென்ன தகவல் பாக்கெட்?

இன்டர்நெட் என்பது "பாக்கெட் ஸ்விட்ச்டு நெட் வொர்க்' என அழைக்கப் படுகிறது. இதற்கு மாறான நெட்வொர்க் "சர்க்யூட் ஸ்விட்ச்டு நெட்வொர்க்' என அழைக்கப்படுகிறது. சர்க்யூட் ஸ்விட்ச்டு நெட்வொர்க்கில் இணைப்பு ஏற்படுத்துகையில் அந்த இணைப்பை மற்றவர்கள் பயன் படுத்த முடியாது. ஆனால் பாக்கெட் ஸ்விட்ச்டு நெட்வொர்க் கைப் பலர் பகிர்ந்து கொள்ள முடியும். ஒரே நேரத்தில் பலர் கேட்கும் தகவல்கள் பிரித்து அனுப்பப்படுகின்றன. இவை அதனதன் சேரும் இடத்தைச் சேர்ந்தவுடன் ஒன்றாக இணைக்கப்பட்டு கேட்பவரிடம் தரப்படுகின்றன. ஒவ்வொரு பாக்கெட் தகவலிலும் ஏறத்தாழ 1500 கேரக்டர்கள் கொண்டதாக இருக்கும். ஒவ்வொரு பாக்கெட்டிலும் ஹெடர்கள் அமைக்கப்பட்டு அனுப்பப்படுகின்றன. இந்த ஹெடர்களில் இந்த பாக்கெட்கள் எப்படி இணைக்கப்பட வேண்டும் என எழுதப்பட்டிருக்கும். அதற்கேற்ற வகையில் இவை இணைக்கப்படும். ஒரு எடுத்துககாட்டைப் பார்ப்போம். பழைய காலத்து அகலமான திறப்பு கொண்ட கடைகளில் அகலமான கதவு இருந்தால் அதனை திறந்து வைத்தால் அதிக இடம் பிடிக்கும் என்பதால் சிறு சிறு பலகைகளை, மேலும் கீழும் அவற்றைக் கொள்வதற்கான சிறிய பள்ளங்களை ஏற்படுத்தி செருகி பின் ஒரு பெரிய இரும்பு பாளத்தில் இணைத்து பூட்டு போடுவார்கள். காலையில் இதனைத் திறந்தவுடன் இந்த பலகைகளைக் கழற்றி ஒன்றன்மீது ஒன்றாக அடுக்கி வைத்திடுவார்கள். மீண்டும் கடையைப் பூட்டுகையில் சரியாக வைப்பதற்காக கதவில் எண் அல்லது வேறு குறியீடுகளை அமைத்திருப்பார்கள். இதே போல் தான் சிறு சிறு பொட்டலங்களில் தகவல்கள் செலுத்தப்படுகின்றன. தேவை எனக் கேட்ட கம்ப்யூட்டரை அடைந்தவுடன் அவை ஒன்று சேர்க்கப்பட்டு தரப்படுகின்றன.

ஒவ்வொரு ஹெடரிலும் செக்சம் (Checksum) எனப்படும் ஒரு எண் தரப்படும். இந்த எண் மூலம் வரவேண்டிய தகவல் சிந்தாமல் சிதறாமல் வந்து விட்டதா என்று அறியப்பட்டு இணைக்கப்படும். இந்த வேலையை டி.சி.பி. வழிமுறை செயல்படுத்துகிறது. இப்போது முதல் செயலுக்கு வருவோம். நீங்கள் சொற்களில் டைப் செய்திடும் முகவரி எந்த இடத்தில் எண்களாகக் கம்ப்யூட்டருக்கு ஏற்றபடி மாறுகிறது? நீங்கள் டைப் செய்த முகவரியை வைத்துக் கொண்டு உங்கள் ஐ.எஸ்.பி. சர்வர், டொமைன் நேம் சர்வர் (Domain Name Server DNS) என்ற ஒன்றை நாடுகிறது. இந்த சர்வரே நீங்கள் தந்த முகவரியின் பெயரின் அடிப்படையில் தேடுதலைச் சுருக்கித் தேடி முகவரிக்கான எண் தொகுப்பை ஐ.எஸ்.பிக்கு வழங்குகிறது. பின் அந்த எண் முகவரியை அடிப்படையாகக் கொண்டு இன்டர்நெட்டில் தேடல் தொடங்கி குறிப்பிட்ட சர்வரை அடைகிறது. பின் முன்பு கூறியபடி தகவல்கள் கிடைக்கின்றன.